search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பஸ்கள் இயக்கம்"

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக்கு கழகங்கள் மூலம் 21 ஆயிரத்து 678 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த போக்குவரத்து கழகங்களுக்கு 555 புதிய பஸ்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு 140 புதிய பஸ்கள் வந்துள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் குன்னூர்-திருப்பூர், குன்னூர்- சேலம், கோத்தகிரி-பெரம்பலூர், கோத்தகிரி-மதுரை, கோத்தகிரி-திருச்சி, கோத்தகிரி-ஈரோடு, கூடலூர்-சேலம், கூடலூர்-திருப்பூர், கூடலூர்- ஈரோடு, கூடலூர்-கோவை, அரசு போக்குவரத்துக் கழக நீலகிரி மண்டலத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிளை-2-ல் இருந்து ராஜபாளையம், ஈரோடு, ஊட்டி-துறையூர், ஊட்டி-கள்ளிகோட்டை, ஊட்டி-ஈரோடு, ஊட்டி-சேலம் ஆகிய வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து 20 புதிய பஸ்கள் இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் அதில் ஒரு புதிய பஸ்சை பார்வையிட்டார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் கடந்த ஆண்டு 19 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது நடப்பாண்டில் ரூ.5 கோடியே 40 லட்சம் மதிப்பில் 20 புதிய பஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.

    அரசு போக்குவரத்துக் கழக நீலகிரி மண்டல பொது மேலாளர் மோகன், சாந்தி ராமு எம்.எல்.ஏ., கோட்ட மேலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக புதிய பஸ்களுக்கு மாலை போடப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நேற்று 471 புதிய பஸ்கள் விடப்பட்டன. ஆனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டும் விடப்பட்டுள்ளது. #Bus
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நேற்று 471 புதிய பஸ்கள் விடப்பட்டன.

    இதில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு (சென்னை) 60 பஸ்களும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு 103 பஸ்கள், சேலத்துக்கு 77 பஸ்கள், கோவைக்கு 43 பஸ்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்கு 111 பஸ்கள், மதுரைக்கு 30 பஸ்கள், நெல்லைக்கு 46 பஸ்கள் புதிதாக விடப்பட்டுள்ளன.

    ஆனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டும் விடப்பட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து பாரிமுனைக்கு புதிய பஸ் இயக்கப்படுகிறது.

    சென்னையில் பழைய மாநகர பஸ்கள் மற்றும் பழுதடைந்த பஸ்களை மாற்றி புதிய பஸ் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சென்னையில் ஓடும் மாநகர பஸ்களில் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    அதாவது சென்னை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் மாநகர பஸ்களை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 20 சதவீதம் பேர் சென்னை மாநகர போக்குவரத்து பயணிகள் ஆவர்.

    கடந்த ஜூலை மாதம் 515 புதிய பஸ்கள் விடப்பட்டன. தற்போது மேலும் 471 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இதுவரை விடப்பட்டுள்ள 986 புதிய பஸ்களில் சென்னை மாநகருக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டுமே கிடைத்துள்ளது.

    கடந்த 12 மாதங்களில் 250 பழைய மாநகர பஸ்கள் இயக்குவதற்கு தகுதியுடன் இல்லை என்று கண்டறியப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் 3,300 பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட 6 லட்சம் கிலோ மீட்டரை கடந்துள்ளது.

    இதையடுத்து அவசர தேவைக்காக 245 புதிய மாநகர பஸ்கள் தேவை என்று கேட்டுக்கொண்ட நிலையில் ஒரே ஒரு பஸ் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறும்போது, “சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 50 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அவை விரைவில் இயக்கப்படும். பஸ்களுக்கு பாடி கட்டும் பணிக்காக தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார். #Bus
    ×